இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் அரசமைப்பிலுள்ள விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கக் கோரும் பிரேரணை நாடாளுமன்றில் நேற்று முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
இந்தப் பிரேரணை நேற்று சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வாவினால் நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டது. பின்னர் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.6 மாதங்களுக்குள் தீர்வை முன்வைக்கும் வகையில் இந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் எனவும், இக்குழுவில் ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் 19 பேரும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் 12 பேரும் உள்ளடங்குகின்றனர் எனவும் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு வாழும் அனைத்து இனமக்களும் தத்தமது தனித்துவத்தையும், பாதுகாப்பையும் மேம்படுத்தவும், கண்ணிய மாகவும் பாதுகாப்பாகவும் ஒரே தேச மக்களாக வாழ்வதற்கான தத்துவம் அளிப்பதை அரசமைப்பின் மூலம் உறுதிப்படு த்தவும் தேவையான விடயங்களை ஆராய்ந்து அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பதற்கென நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கவேண்டும் எனக் கோரும் பிரேரணையே அங்கீகரிக்கப்பட்டது.
இவ்வாறு தெரிவுசெய்யப்படும் தெரிவுக்குழு, நியமித்த தினத்திலிருந்து ஆறு மாதங்களுக்குள் தமது அறிக்கையைச் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பிரேரணையில் ஆளுந்தரப்பு உறுப்பினர்களான அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, பஸில் ராஜபக்ஷ, ஆறுமுகன் தொண்டமான், சம்பிக்க ரணவக்க, டக்ளஸ் தேவானந்தா, ரவூப் ஹக்கீம், அநுர பிரியதர்ஷன யாப்பா, பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, ரஜீவ விஜேசிங்க, ஏ.எச்.எம்.அஸ்வர், பி.பியசே ன ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
- இந்தத் தெரிவுக்குழுவில் மக்கள் பிரதிநிதிகளான 31 பேர் இடம்பெறவேண்டும்.
- தெரிவுக்குழுவின் தலைவரை சபாநாயகரே நியமிப்பார்.
- இத்தெரிவுக்குழுவினர் தமது பரிந்துரை அறிக்கையை நியமிக்கப்பட்ட தினத்திலிருந்து ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.
ஆராயப்படவேண்டிய விடயங்கள்
- அனைத்து இனமக்களும் தமது தனித்துவத்தையும், பாதுகாப்பையும், மேம்படுத்தவும், கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் ஒரே தேச மக்களாக வாழ்வதை உறுதிப்படுத்தல்.
- இலங்கையில் வாழும் மக்களின் மத்தியில் ஐக்கியத்தை மேம்படுத்துதல்.
- சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார அபிவிருத்திகளை மேம்படுத்துவதற்கு தத்துவமளித்தல்.
தெரிவுக்குழுவுக்கான அதிகாரங்கள்
- அவசியம் எனக் கருதும் எவரையும் அழைத்து விசாரிக்கவும், ஆவணங்களைப் பரிசீலனை செய்யவும்
- இவ்வாறு அழைக்கப்படும் நபரை சத்தியப்பிரமாணம் அல்லது உறுதிமொழியின்பேரில் விசாரணை செய்யவும்
- தெரிவுக்குழுவுக்கு துணைபுரியும் பொருட்டு உரிய துறையிலுள்ள நிபுணர்களினதும், வல்லுநர்களினதும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளவும்
- காலத்திற்கு காலம் இடைக்கால அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவும் இந்தத் தெரிவுக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்படவேண்டும் எனவும் இந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.